
தனது குழந்தைப்பருவ பயிற்சியாளரான ராமகந்த் அச்ரேக்கரின் சிலையை சிவாஜி பூங்காவில் திறக்கும் மகாராஷ்டிர அரசின் முடிவை வரவேற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசின் நகர்புற வளர்ச்சித் துறையின் சார்பாக சிவாஜி பூங்காவில் கிரிக்கெட் பயிற்சியாளரான ராமகந்த் அச்ரேக்கரின் 6 அடி சிலையை 5-வது நம்பர் வாசலுக்கு அருகே நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் இந்த முடிவை வரவேற்று சச்சின் டெண்டுல்கர் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அச்ரேக்கர் சார் என்னுடைய வாழ்க்கையிலும், மேலும் பலரது வாழ்க்கையிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது அனைத்து மாணவர்களின் சார்பாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன்.
அவரது வாழ்க்கை சிவாஜி பூங்காவில் கிரிக்கெட்டை மட்டுமே மையமாக வைத்து இயங்கிக் கொண்டிருந்தது. அவர் பல ஆண்டுகளாக பயிற்சியளித்து வந்த சிவாஜி பூங்காவில் அவரது நினைவாக சிலை நிறுவ வேண்டும் என்ற மகாஷ்டிர அரசின் முடிவு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் உள்பட 12 இந்திய வீரர்களுக்கு பயிற்சியளித்துள்ள அச்ரேக்கருக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.
சச்சின் டெண்டுல்கரை தவிர்த்து, ராம்நாத் பார்க்கர், பல்விந்தர் சிங் சாந்து, லால்சந்த் ராஜ்புட், சந்திரகாந்த் பண்டித், பிரவின் அம்ரே, சமீர் திஹே, வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கார், பராஸ் மாம்ப்ரே, ரமேஷ் பவர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோருக்கு அச்ரேக்கர் பயிற்சியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.