டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் திலக் வர்மா படைத்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா அண்மையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடித்து அசத்தினார். செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் 107 ரன்களும், ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற போட்டியில் 120 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்திலிருந்து அசத்தினார்.
தொடர்ச்சியாக 3-வது சதம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குப் பிறகு, சையது முஸ்தக் அலி கோப்பையில் மேகாலயாவுக்கு எதிராக விளையாடிய இன்றையப் போட்டியில் திலக் வர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார்.
ராஜ்கோட்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் திலக் வர்மா 67 பந்துகளில் 151 ரன்கள் எடுத்து அசத்தினார்.அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் திலக் வர்மா. அதேபோல, டி20 போட்டிகளில் 150 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த மூன்று சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் திலக் வர்மாவை, அந்த அணி நிர்வாகம் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக அணியில் தக்கவைத்தது குறிப்பிடத்தக்கது.