
ஆஸ்திரேலியாவில் சதம் விளாசுவது ஜோ ரூட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 483 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸ்களில் தொடர்ச்சியாக சதம் விளாசி அசத்தினார் ஜோ ரூட். இரண்டாவது இன்னிங்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34-வது சதத்தைப் பதிவு செய்த அவர், இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியவர் என்ற சாதனையை படைத்தார்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் சதம் விளாசுவது ஜோ ரூட்டுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் பார்த்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட். அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடியும்போது, ஆஸ்திரேலியாவில் சதம் விளாசியுள்ளேன் என நினைக்கும்போது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
ஆஸ்திரேலியாவில் 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜோ ரூட், இதுவரை ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய மண்ணில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 89 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.