
ரசிகர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை தாக்க முயன்ற பாகிஸ்தான் வீரரை பாதுகாவலர் தரதரவென இழுத்துச் சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில், இரு தொடர்களையும் பாகிஸ்தான் அணி இழந்தது.
மௌண்ட் மாங்கனுவில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியிடம் பாகிஸ்தான் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை முழுமையாக இழந்தது. இதனால், ஆத்திரமடைந்த வெளிநாட்டு ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் வீரர்களை கடுமையாக விமர்சித்தனர். அவர்களுக்கு எதிராக தேவையற்ற வார்த்தைகளால் கோஷமிட்டனர்.
இதனால், கோபமடைந்த பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் குஷ்தில் ஷா, அந்த ரசிகர்களை நோக்கி அடிக்கப் பாய்ந்து பவுண்டரி தடுப்பைத் தாண்டினார். மேலும், ரசிகர்களையும் தாக்க முயன்றார்.
இதனைப் பார்த்த பாதுகாவலர்கள் அவரைத் தரதரவென இழுத்துச் சென்று அங்கிருந்து வெளியேற்றினர். மற்ற பாதுகாவலர்களும் அந்த ரசிகர்களையும் அங்கிருந்து வெளியேற்றினர். போட்டியைக் காண வந்த ரசிகர்களை வீரர் ஒருவர் தாக்க முயன்றய சம்பவம் கடும் அதிர்வலைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அவர்கள் குஷ்தில் ஷாவை நோக்கி தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். எங்கள் நாட்டு வீரர் மீது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, முதல் டி20 போட்டியின்போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் சாக் பௌல்க்ஸ் தோள்பட்டையின் மீது குஷ்தில் ஷா தேவையின்றி மோதினார். இதனால், அவருக்குப் போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதம் அபராதமும், 3 தகுதி இழப்பு புள்ளிகளும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐபிஎல்-லிருந்து எப்போது ஓய்வு? மனம் திறந்த எம்.எஸ்.தோனி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.