அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா!
படம் | பிசிசிஐ
Published on
Updated on
2 min read

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்காட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

சதம் விளாசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ்

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 54 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பிரதீகா ராவல் 61 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, ஹர்லீன் தியோல் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தனர். தொடக்க வீராங்கனைகள் அதிரடியாக விளையாடியது போன்று இந்த இணையும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹர்லீன் தியோல் அரைசதம் கடந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் விளாசி அசத்தினார். ஹர்லீன் தியோல் 84 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 91 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். அதில் 12 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 370 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து தரப்பில் ஓர்லா பிரண்டர்கேஸ்ட் மற்றும் அர்லீன் கெல்லி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜியார்ஜினா டெம்ப்ஸி ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

தொடரை கைப்பற்றிய இந்தியா

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணி, 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 116 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி தோல்வியைத் தழுவியது. அந்த அணியில் அதிகபட்சமாக கோல்ட்டர் ரெய்லி 80 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, சாரா ஃபோர்ப்ஸ் 38 ரன்களும், லாரா டெலானி 37 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகளையும், டிட்டாஸ் சாது மற்றும் சயாலி சத்காரே தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com