
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (ஜூன் 10) லார்ட்ஸ் திடலில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இரண்டு அணிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி மிகவும் தயாராக இருப்பார்கள். ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் நிறைய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆஷஸ் டெஸ்ட் தொடர், கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என பல போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அவர்களிடம் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்தின் சூழல் தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் ஆஸ்திரேலிய அணி நன்றாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அவர்கள் முக்கியமான போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துவார்கள்.
அழுத்தம் நிறைந்த போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அதன் காரணமாகவே, மற்ற அணிகளைக் காட்டிலும் ஆஸ்திரேலியாவிடம் அதிக கோப்பைகள் இருக்கின்றன. பாட் கம்மின்ஸ் போட்டிகளை வென்று கொடுப்பவர். தென்னாப்பிரிக்க அணிக்கு அவர் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்றார்.
இதையும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: பிளேயிங் லெவனை அறிவித்த ஆஸ்திரேலியா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களம் காண்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.