தீவிரவாதம் ஒழியும் வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது: கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியது குறித்து...
கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

இந்தியாவின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தீவிரவாதம் ஒழியும் வரை இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெடுங்காலமாகவே எல்லைப் பிரச்னைகள் இருந்து வருகின்றன. இதனால் 2007 முதல் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கும் பயணம் மேற்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தொடர்களில் மட்டுமே இவ்விரு அணிகளும் மோதுகின்றன. மற்ற போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்திய முப்படைகள் ஒருங்கிணைந்து செவ்வாய் நள்ளிரவில் அதிரடித் தாக்குதல் நடத்தியது.

கௌதம் கம்பீர் இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:

என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால் தீவிரவாதம் ஒழியும்வரை இந்தியாவும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடக் கூடாது.

இரு நாட்டிற்கும் இடையேயான கிரிக்கெட், பாலிவுட் என எந்த விதமான உறவும் தேவையில்லை. ஏனெனில் இவையெல்லாம் இந்திய ராணுவ வீரர்கள், மக்களை விட முக்கியமானதில்லை என நான் இதற்கு முன்பாகவே சொல்லியிருக்கிறேன்.

இருப்பினும் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாட வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்வது அரசாங்கம்தான்.

போட்டிகள் நடைபெறுவதும், திரைப்படங்கள் எடுப்பதும், பாடகர்கள் பாடுவதும் நமது குடும்பத்தில் ஒருவர் உயிரிழப்பதற்கு சமனாகாது.

ஆசிய கோப்பை விளையாடுவது குறித்து நான் முடிவெடுக்க முடியாது. பிசிசிஐ, இந்திய அரசும் இதில் முடிவு எடுக்கும். அப்படியே விளையாட அனுமதித்தாலும் அதை நாங்கள் அரசியலாக்க மாட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com