
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை கருண் நாயருக்கு கிரிக்கெட் கொடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ள நிலையில், 33 வயதாகும் கருண் நாயரும் இடம்பெற்றுள்ளது சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு (36 வயது) அடுத்தபடியாக அணியில் இடம்பெற்றுள்ள மூத்த வீரர்களில் ஒருவராக கருண் நாயர் உள்ளார்.
கருண் நாயர் இந்திய அணிக்காக கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடியிருந்தார். அதன் பின், 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
உள்ளூர் போட்டிகளில் அபாரமாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டுமின்றி, இந்திய அணித் தேர்வுக்குழுவின் கவனத்தையும் அவர் ஈர்த்துள்ளது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம்பெற்றதிலிருந்து தெரிகிறது.
2024-25 சீசன் உள்ளூர் போட்டிகளில் 9 போட்டிகளில் விளையாடிய கருண் நாயர் 863 ரன்கள் குவித்தார். அதில் 4 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 54 ஆக இருந்தது. விஜய் ஹசாரே கோப்பையில் 7 போட்டிகளில் 779 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். அதில் 5 சதங்கள் அடங்கும். அவரது சராசரி 389.50 ஆக இருந்ததை பலராலும் நம்பமுடியவில்லை.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி கருண் நாயர் அவரது சமூக வலைத்தளப் பதிவில், டியர் கிரிக்கெட் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடு எனக் கேட்டிருந்தார்.
கருண் நாயருக்கு இன்று (மே 22, 2025) உங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்கிறேன் என கிரிக்கெட் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.