

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று (அக்டோபர் 31) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சிக்கந்தர் ராஸா 32 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டோனி முனியோங்கா 19 ரன்களும், பிரையன் பென்னட் 16 ரன்களும் எடுத்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் ரஷித் கான் 3 ஓவர்களில் வெறும் 9 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முஜீப் உர் ரஹ்மான் மற்றும் அப்துல்லா அகமதுசாய் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஃபரீத் அகமது மாலிக் மற்றும் முகமது நபி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
தொடரைக் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 18 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது.
ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம் கடந்து கடைசி வரை களத்தில் இருந்தார். அவர் 51 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியாக 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். டார்விஸ் ரஷூலி 17 ரன்களும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 16 ரன்களும் எடுத்தனர்.
ஜிம்பாப்வே தரப்பில் பிராட் ஈவன்ஸ் 2 விக்கெட்டுகளையும், வெலிங்டன் மஸகட்ஸா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரஷித் கானுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.