தில்லியிடம் தோல்வி: சிஎஸ்கேவுக்கு முதல் இரு இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டா?
By DIN | Published On : 05th October 2021 01:12 PM | Last Updated : 05th October 2021 01:59 PM | அ+அ அ- |

சிஎஸ்கே அணிக்கு எல்லாமே நல்லபடியாகச் சென்றுகொண்டிருந்தது. 11 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றது.
அதற்குப் பிறகு விளையாடிய இரு ஆட்டங்களிலும் தோல்வியடைந்ததால் முதல் இரு இடங்களில் இடம்பெறக் கூடிய வாய்ப்பை சிஎஸ்கே இன்னும் அடையாமல் தவித்துக்கொண்டிருக்கிறது.
வியாழன் அன்று பஞ்சாப்பை எதிர்கொள்கிறது சிஎஸ்கே. இந்த ஆட்டத்தில் வென்றால் சிஎஸ்கேவால் முதல் இரு இடங்களில் ஒன்றை அடைய முடியுமா?
நேற்றைய ஆட்டத்தில் தில்லியைத் தோற்கடித்திருந்தால் முதல் இரு இடங்களுக்குள் வந்திருக்க முடியும். இப்போது அந்த வாய்ப்பு தில்லிக்குச் சென்றுவிட்டது. சிஎஸ்கேவுக்கு இப்போதைய தேவை - 20 புள்ளிகள்.
கடைசி ஆட்டத்தில் சிஎஸ்கே பஞ்சாப்பை வென்று ஆர்சிபி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் (ஹைதராபாத், தில்லி) வென்றால் மூன்று அணிகளும் 20 புள்ளிகள் வைத்திருக்கும். அப்போது நெட் ரன்ரேட் அடிப்படையில் சென்னைக்கு வாய்ப்பு கிடைக்கும். காரணம், இரு தோல்விகளைப் பெற்றாலும் அனைத்து அணிகளை விடவும் நெட் ரன்ரேட் சிஎஸ்கேவுக்குச் சிறப்பாக உள்ளது.
தில்லியிடம் நேற்று தோற்ற சிஎஸ்கே ஒருவேளை பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் தோற்றுவிட்டால்?
அப்போது தில்லி அணி முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடித்துவிடும். ஆர்சிபி அணி மீதமுள்ள இரு ஆட்டங்களிலும் வெல்லக்கூடாது. இதனால் சிஎஸ்கே 18 புள்ளிகள், ஆர்சிபி 16 புள்ளிகள் என்கிற அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கேவுக்கு 2-ம் இடம் கிடைக்கும். இறுதிச்சுற்றுக்குச் செல்ல இரு வாய்ப்புகள் கிடைக்கும்.