நடுவர்களின் முடிவு ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடாது என முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் நடுவர்களின் சில முடிவுகள் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி அணி பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரில் பிராவோ வீசிய பந்து கைதவறிச் சென்று ஆடுகளத்துக்கு வெளியே, பேட்ஸ்மேன் பகுதியில் இருந்த ஸ்டம்பின் பின்னால் விழுந்தது. இதற்கு நோ பால் தரவேண்டும் என தொலைக்காட்சி வர்ணனையாளர்கள் கூறினார்கள். ஆனால் கள நடுவர்கள், டிவி நடுவரிடம் விவாதித்து வைட் வழங்கினார்கள். இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையில் நடுவர்களின் முடிவு பற்றி கவாஸ்கர் கூறியதாவது:
அது நோ பால் தான். டிவி நடுவர்களின் சில முடிவுகள் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் விதமாக அமைந்துவிடும். இப்படி நடக்கக்கூடாது. இதுபோன்ற முடிவுகள் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடக்கூடாது. நல்லவேளை, தில்லி அணி வெற்றி பெற்றது. நடுவரின் அந்த முடிவு, ஆட்டத்தை மாற்றியிருக்கும் என்றார்.
எனினும் இந்த விஷயத்தில் நடுவர்கள் எடுத்த முடிவு சரியானதாகவே இருந்தது. ஆடுகளத்துக்கு வெளியே பந்து பிட்ச் ஆனால் அது நோ பாலாகக் கருதப்படும். ஆனால், பேட்ஸ்மேன் பகுதியில் உள்ள ஸ்டம்புக்குப் பின்னால் பிட்ச் ஆனால் அது வைட் ஆகவே கருதப்படும். இந்தத் தகவலை ஐபிஎல் இணையத்தளத்தின் விடியோவில் தில்லி வீரர் அஸ்வின் தெரிவித்தார்.
எப்படிப் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் அந்த தோனி எங்கே?
தில்லியிடம் தோல்வி: சிஎஸ்கேவுக்கு முதல் இரு இடங்கள் கிடைக்க வாய்ப்புண்டா?
பிளேஆஃப் வாய்ப்பு கிடைக்குமா?: மும்பை தலை மேல் கத்தி!
ஐபிஎல்: பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவிக்கும் ராஜஸ்தான் தொடக்க வீரர்கள்
துபை ஆடுகளத்தில் தோனி மட்டுமா தடுமாறினார்?: பயிற்சியாளர் பிளெமிங்