ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2021 போட்டியில் சிறப்பாக விளையாடிய கேகேஆர் வீரர் வெங்கடேஷ் ஐயர், தில்லி வீரர் அவேஷ் கான் ஆகியோர் இந்திய அணிக்கான வலைப்பயிற்சி வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியின் வலைப்பயிற்சி வீரர்களாக அவேஷ் கானும் வெங்கடேஷ் ஐயரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதனால் ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப முடியாது.
தில்லி வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான், 15 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கேகேஆர் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர், 8 ஆட்டங்களில் 2 அரை சதங்களுடன் 265 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் - 123.25. மேலும் சில ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடும் ஹார்திக் பாண்டியா ஒரு ஓவர் கூட வீசாததால் அவருடைய உடற்தகுதி குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. பாண்டியாவில் பந்துவீச முடியாத நிலை ஏற்பட்டால் வெங்கடேஷ் ஐயர் இந்திய அணிக்குத் தேர்வாகவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.