ஒரே நேரத்தில் நடைபெறும் இரு ஐபிஎல் ஆட்டங்கள்: காரணம் என்ன?

அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் புதிதாகச் சேர்க்கப்படும் 2 அணிகளுடன்...
ஒரே நேரத்தில் நடைபெறும் இரு ஐபிஎல் ஆட்டங்கள்: காரணம் என்ன?

ஐபிஎல் 2021 போட்டியின் லீக் ஆட்டங்கள் அக்டோபர் 8, வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகின்றன.

அன்றைய தினம் நடைபெறும் மதிய ஆட்டத்தில் மும்பை - சன்ரைசர்ஸ் அணிகளும் இரவு ஆட்டத்தில் ஆர்சிபி - தில்லி அணிகள் மோதுவதாக இருந்தன.

இதில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மும்பை - சன்ரைசர்ஸ், ஆர்சிபி - தில்லி ஆகிய இரு ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் எனத் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் இதுவரை ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெற்றது கிடையாது. பிறகு ஏன் இந்தப் புது முயற்சியை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது? இதற்குச் சொல்லப்படும் காரணம்?

ஐபிஎல் போட்டியில் இந்திய நேரப்படி மதியம் ஆரம்பிக்கும் ஆட்டங்களுக்கு ரேட்டிங் அவ்வளவாகக் கிடைப்பதில்லை என ஸ்டார் தொலைக்காட்சி பிசிசிஐயிடம் புகார் தெரிவித்துள்ளது. இதனால் சோதனை முயற்சியாக ஒரே நேரத்தில் இரு ஐபிஎல் ஆட்டங்களை நடத்திப் பார்க்க ஸ்டார் தொலைக்காட்சி ஆர்வம் காட்டியதாகவும் இதற்கு பிசிசிஐ சம்மதித்ததாகவும் சொல்லப்படுகிறது. ரேட்டிங் காரணமாகவே இரு கடைசி லீக் ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளன. இதில் கிடைக்கும் ரேட்டிங்கைப் பொறுத்து இதுபோல ஒரே நேரத்தில் இரு ஆட்டங்களைத் தொடர்ந்து நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. 

மேலும் அடுத்த வருட ஐபிஎல் போட்டியில் புதிதாகச் சேர்க்கப்படும் 2 அணிகளுடன் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. ஒரே நேரத்தில் இரு ஆட்டங்கள் நடைபெற்றால் குறைந்த நாள்களில் பல ஆட்டங்களை நடத்தவும் வாய்ப்புள்ளது என்பதால் ஸ்டார் தொலைக்காட்சியின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு இந்த மாற்றத்தைச் செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com