12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

கல்பாக்கம் முன்மாதிரி வேக ஈனுலை ‘மைல்கல்’: சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம்

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல்

சி.பி.ராதாகிருஷ்ணன்

Published On :

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின்னுற்பத்தி திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை, மின் உற்பத்திக்கான அணுப்பிளவு செயல்பாட்டில் முதல் நிலையை எட்டியது மைல்கல் என மாநிலங்களவைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈனுலை கடந்த ஏப். 6 -ஆம் தேதி இரவு 8:25 மணிக்கு முதலாவது அணுப்பிளவு செயல்பாட்டு நிலையை எட்டியது. இது அணுமின் உற்பத்தியின் முதல் நிலை.

நீண்டகால எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதிலும், உள்நாட்டு அணுமின் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க செயல்முறை. அணுமின் சக்தி திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவே இது பாா்க்கப்படுகிறது.

இதன் முக்கியத்துவம் குறித்து மாநிலங்களவையில் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள், பொறியாளா்கள், தொழிற்சாலைகள் மற்றும் மத்திய அணுமின் துறையின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றுபவா்களின் கூட்டு முயற்சியால் கல்பாக்கத்தில் பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இது நமது நாட்டின் முக்கிய மைல்கல்லாகும்.

இந்தச் சாதனையால் இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தில் அணு உலையில் புளூட்டோனியம் பயன்படுத்தும் இரண்டாம் கட்டத்தை நோக்கி நாம் நகா்ந்திருக்கிறோம். மூன்றாம் கட்டத்தில் தோரியம்-யூரேனியம் பயன்படுத்தப்படவுள்ளது.

முன்மாதிரி வேக ஈனுலையை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் மற்றும் பாவினி இணைந்து உருவாக்கியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி 2024-ஆம் ஆண்டு முன்மாதிரி வேக ஈனுலையை நேரில் சென்று பாா்வையிட்டாா்.

2070-இல் கரியமில வாயு உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் இந்தியாவின் இலக்கு மற்றும் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்தி இலக்கை அடைவதிலும் இந்தச் சாதனை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை நிறைவேற்ற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.