ஐபிஎல் போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இருவருக்கு எதிராகவும் பந்துவீசுவது குறித்துப் பேட்டியளித்துள்ளார் ஆர். அஸ்வின்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், கிரிக்இன்ஃபோ இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு எதிராகப் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இந்திய அணியில் நான் விளையாடும் வீரர்களில் அவர்களிருவரும் மிகத் தரமான பேட்டர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இவர்களுக்கு எதிராகப் பந்துவீச எனக்கு வாய்ப்பு கிடைக்காது. ஆனால் ஐபிஎல் போட்டியில் அவர்களுடன் மோத வாய்ப்பு கிடைக்கும். எனவே அவர்களுக்கு எதிராக விளையாட ஆர்வமாக இருப்பேன். இந்திய அணி வீரர்களிடம் ஆட்டமிழக்க கோலியும் ரோஹித்தும் விரும்ப மாட்டார்கள். எனவே அவர்களுடனான போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருப்பேன் என்றார்.
அடுத்த இரு ஆட்டங்களில் மும்பை, ஆர்சிபி அணிகளுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. இதனால் இவ்விரு ஆட்டங்களிலும் ரோஹித் சர்மா, கோலியை அஸ்வின் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்று பார்க்கலாம்.