பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் விருத்திமான் சஹா களமிறங்கினர். சஹா 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனையடுத்து, கேன் வில்லியம்சன் மற்றும் ஷுப்மன் கில் ஜோடி சேர்ந்தனர். கேன் வில்லியம்சன் நிதானமாக விளையாட, ஷுப்மன் கில் சிறிது அதிரடியாக ஆடினார். இருப்பினும், கேன் வில்லியம்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்ஷன் அதிரடியாக 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் அடங்கும்.
விஜய் சங்கர் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஷுப்மன் கில்லுடன் ராகுல் திவாட்டியா ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ஷுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடிய திவாட்டியா 8 பந்துகளில் 23 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷுப்மன் கில் 48 பந்துகளில் 89 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்பிரித் பிரார் மற்றும் ஹர்ஷல் படேல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது.