பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக முதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அய்டன் மார்கரம் வந்த வேகத்தில் 0 ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அபிஷேக் சர்மா 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், நிதீஷ் ரெட்டி மற்றும் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தனர். ஆனால், இந்த இணை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ராகுல் திரிபாதி 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் போனாலும் மறுமுனையில் நிதீஷ் ரெட்டி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் அப்துல் சமத் அதிரடியாக 12 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும். ஷபாஸ் அகமது 7 பந்துகளில் 14 ரன்கள் எடுக்க சன் ரைசர்ஸ் அணி 180 ரன்களைக் கடந்தது.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 9 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சாம் கரண் மற்றும் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், ககிசோ ரபாடா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் விளையாடி வருகிறது.