பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அடுத்த சில போட்டிகளில் விளையாடமாட்டார் என பஞ்சாப் அணியின் இயக்குநர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தியது. நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் விளையாடாத காரணத்தால் அணியை சாம் கரண் வழிநடத்தினார்.
இந்த நிலையில், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த 7-10 நாள்கள் பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் இடம்பெறமாட்டார் என பஞ்சாப் அணியின் இயக்குநர் சஞ்சய் பங்கார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷிகர் தவானுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் அடுத்த சில நாள்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. ஷிகர் தவானைப் போன்ற அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரர் அணியில் இல்லாததது அணிக்கு கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைய குறைந்தது 7-10 நாள்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இல்லாதபோது அணியை சாம் கரண் கேப்டனாக வழிநடத்துவார் என்றார்.