காயம் காரணமாக தில்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தில்லி கேப்பிடல்ஸ், இரண்டு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், காயம் காரணமாக அந்த அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பியுள்ளது தில்லி கேப்பிடல்ஸுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தில்லி கேப்பிடல்ஸ் விளையாடிய கடந்த இரண்டு போட்டிகளிலும் மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெறவில்லை. அவர் கடைசியாக கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 23 ஆக உள்ளது.
சிகிச்சை பெறுவதற்காக தாயகம் திரும்பியுள்ள மிட்செல் மார்ஷ் மறுபடியும் அணியில் இணைவாரா, மாட்டாரா என்பது குறித்து அணி நிர்வாகம் எதுவும் தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.