பில் சால்ட்டின் அதிரடியான ஆட்டத்தால் லக்னௌவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் பேட் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோலஸ் பூரன் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்கியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரகுவன்ஷி 7 ரன்களில் ஆட்டமிழக்க, பில் சால்ட் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். ஒருபுறம் பில் சால்ட் அதிரடியில் மிரட்ட ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதிரடியாக விளையாடிய பில் சால்ட் அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். அவர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 47 பந்துகளில் 89 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு உறுதுணையாக நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 38 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இறுதியில், 15.4 ஓவர்களில் இலக்கை எட்டிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌவை வீழ்த்தியது. லக்னௌ தரப்பில் மோஷின் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பில் சால்ட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.