சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ரகசியத்தை அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 288 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆர்சிபிக்கு நிர்ணயித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ரகசியத்தை டிராவிஸ் ஹெட் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களது டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர்கள். அதிலும் குறிப்பாக, பவர் பிளேவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பது எங்களது திட்டம். நானும் அபிஷேக் சர்மாவும் எங்களால் முடிந்த அளவுக்கு அதிரடியாக விளையாடி பவர் பிளேவில் அதிக ரன்களை குவிக்க முயற்சிக்கிறோம். அது பவுண்டரிகளாக இருக்கலாம் அல்லது சிக்ஸர்களாக இருக்கலாம். பவர் பிளேவை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்காக பவர் பிளேவில் கண்மூடித்தனமாக ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்றில்லை. நாங்கள் ஷாட்டுகளை தேர்ந்தெடுத்தே விளையாடுகின்றோம் என்றார்.
நேற்றையப் போட்டியில் டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.