சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது.
போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. ஒரே நேரத்தில் பலர் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றதால் இணையதளம் முடங்கியது. இதனால், ரசிகர்கள் பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், சென்னை அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளார்களில் ஒருவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை அணியின் முதல் போட்டிக்கு டிக்கெட் பெற உதவி செய்யுமாறு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஐபிஎல் தொடரின் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டிக்கான டிக்கெட்டுக்கானத் தேவை நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. எனது குழந்தைகள் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சிகள் மற்றும் முதல் போட்டியை நேரில் காண விரும்புகின்றனர். தயவு செய்து உதவி செய்யுங்கள் எனப் பதிவிட்டுள்ளார்.