தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானில் இன்று (மார்ச் 28) நடைபெற்று வரும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் தில்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ராஜஸ்தான் முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 5 ரன்களிலும், பட்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின், ரியான் பராக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஜோடி சேர்ந்தனர்.
இந்த இணை சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருப்பினும், அஸ்வின் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். துருவ் ஜுரெல் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. தில்லி கேப்பிடல்ஸ் தரப்பில் கலீல் அகமது, முகேஷ் குமார், ஆண்ட்ரிச் நோர்கியா, அக்ஷர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேப்பிடல்ஸ் களமிறங்குகிறது.