ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியது குறித்து இளம் வீரர் சமீர் ரிஸ்வி மனம் திறந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே தனது இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது. இந்தப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சமீர் ரிஸ்வியின் அறிமுக ஐபிஎல் போட்டியாகும். இந்தப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி அசத்தினார் சமீர் ரிஸ்வி.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியது குறித்து இளம் வீரர் சமீர் ரிஸ்வி மனம் திறந்துள்ளார்.
இது தொடர்பாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள விடியோவில் அவர் பேசியிருப்பதாவது: 19-வது ஓவரில் களமிறங்கும்போது நீங்கள் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. அந்த சூழலில் பந்தை தெளிவாக பார்த்து அடிக்க வேண்டும் என்பதே எனக்கு முக்கியமான விஷயமாக இருந்தது. உங்களால் என்ன செய்ய முடியும் என்பது குறித்தெல்லாம் அதிகம் யோசிக்க நேரமிருக்காது. ஆனால், பந்து அடிப்பதற்கு ஏதுவான இடத்தில் வீசப்படும் பட்சத்தில், அதனை சரியாக எதிர்கொண்டு அடிக்க வேண்டும் என நினைத்தேன். முதல் பந்தில் நான் நினைத்தது நடந்ததால், அதனை சிக்ஸருக்கு விளாசினேன்.
19-வது ஓவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேனுக்கு முன் எவ்வளவு பெரிய பந்துவீச்சாளராக இருந்தாலும், பேட்ஸ்மேனால் அழுத்தத்தை உணர முடியாது. ஏனென்றால், 19-வது ஓவரில் நீங்கள் களமிறங்கும்போது, பந்தை அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில் இருக்க நேரிடும்.முதல் முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறேன். மிகப் பெரிய பந்துவீச்சாளருக்கு எதிராக விளையாடுகிறோம்.
முதல் பந்து கூக்ளியாக இருக்குமென எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எண்ணமே என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் நான் ஏலத்தில் வாங்கப்படாதபோது, எனது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரிடமும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும்போது, முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பேன் எனக் கூறினேன். அதேபோல் முதல் பந்தில் சிக்ஸர் அடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அந்த தருணம் சிறப்பானதாக இருந்தது என்றார்.
ரஷித் கான் பந்துவீச்சில் சமீர் ரிஸ்வி சிக்ஸர் விளாசியது குறிப்பிடத்தக்கது