
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னதாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (மே 26) நடைபெறுகிறது. இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸுக்கு கடந்த இரண்டு ஆண்டுகள் மிகவும் சிறப்பான ஆண்டுகளாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி, 50 ஓவர் உலகக் கோப்பையில் வெற்றி, சன்ரைசர்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு கொண்டு வந்துள்ளது என அவர் வெற்றியின் உச்சியில் இருக்கிறார்.
இந்த நிலையில், எல்லா வெற்றிப் பயணங்களும் ஒருகட்டத்தில் முடிவடைந்து விடும் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனுமான பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: சன்ரைசர்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுப்பது சிறப்பான விஷயமாக இருக்கும். ஆனால், எல்லா வெற்றிப் பயணங்களும் ஒரு கட்டத்தில் முடிவடைந்துவிடும். கடந்த இரண்டு ஆண்டுகள் எனக்கு சிறப்பானதாக அமைந்தது. ஆனால், இதற்கு முன்பாக நான் எந்த ஒரு டி20 அணியையும் கேப்டனாக வழிநடத்தியதில்லை. அதனால், போட்டியில் என்ன மாதிரியான முடிவு இருக்கும் என்பதை உறுதியாக எதிர்பார்க்க முடியவில்லை.
சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடுகின்றனர். அதேபோல எங்களிடம் ஜெயதேவ் உனத்கட் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்கள் சுதந்திரமாக விளையாடுகிறார்கள். அதனை அணி நிர்வாகமும் ஊக்கப்படுத்துகிறது. அவர்கள் சிறப்பாக விளையாடத் தவறினாலும், அவர்கள் மீது கோபம் கொள்ளாமல் அவர்களது ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள உதவி செய்ய வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.