எதிரணிக்கு சாதகம்: பிட்ச் மேற்பார்வையாளரை குற்றம் சுமத்தும் லக்னௌ ஆலோசகர்!

தோல்விக்குப் பிறகு லக்னௌ அணியின் ஆலோசகர் ஜாகீர் கானின் பேட்டி...
ஜாகீர் கான்
ஜாகீர் கான்படம்: ஐபிஎல்
Published on
Updated on
1 min read

ஐபிஎல் 18ஆவது சீசனில் 13-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜெயன்ட்ஸை நேற்று (திங்கள்கிழமை) சாய்த்தது.

முதலில் பேட்டிங் செய்த லக்னௌ அணி 20 ஓவா்களில் 171/7 ரன்கள் எடுக்க, பஞ்சாப் கிக்ஸ் அணி 16.2 ஓவா்களில் 177/2 ரன்கள் எடுத்து எளிமையாக வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியின் தோல்விக்கு காரணம் பிட்ச் மேற்பார்வையாளர்தான் என லக்னௌ அணியின் ஆலோசகர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, கேகேஆர் கேப்டன் ரஹானே, சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் இது குறித்த புகார்களை தெரிவித்திருந்தனர்.

எதிரணிக்கு சாதகம்

ஜாகீர் கான் பேசியதாவது:

இது சொந்த மண்ணில் நடக்கும் போட்டி என்பதால் மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. பொதுவாக, ஐபிஎல் தொடர்களில் ஒவ்வொரு அணிக்கும் அதன் சொந்த மண்ணில் கூடுதல் ஆதாயம் இருக்கும்.

இந்தப் பார்வையில் சொல்ல வேண்டுமானால் எங்களது பிட்ச் மேற்பார்வையாளர் இதைச் சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியாகவே கருதவில்லை.

இந்தப் போட்டிக்கு பிட்ச்சை தயாரித்தது பஞ்சாப் அணியின் பிட்ச் மேற்பார்வையாளர் போலிருக்கிறது.

இந்த பிட்ச் குறித்து நாங்கள் கண்டறிய வேண்டும். இங்கு எனக்கு எல்லாமே புதிதாக இருக்கிறது.

நம்பிக்கையுடன் இருக்கிறோம்

இதுதான் முதலும் கடைசியுமாக லக்னௌ ரசிகர்கள் வருத்தம் அடைவதாக இருக்குமென நம்புகிறேன்.

சொந்த மண்ணில் வெற்றி பெறலாம என மிகுந்த நம்பிக்கையில் இங்கு வந்திருப்பார்கள்.

ஒரு அணியாக நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். போட்டியில் தோல்வியுற்றதை ஒப்புக்கொள்கிறோம்.

இனிமேலும் இங்கு 6 போட்டிகள் இருக்கின்றன. என்னசெய்தாவது சொந்த மண்ணில் இனிமேல் தாக்கம் இருக்குமாறு விளையாடுவோம்.

எங்களுக்கென்று ஒரு தரத்தை நிர்ணயிப்போம்

இந்த சீசனில் இது எங்களது 3ஆவது போட்டி. இந்த சீசனில் எங்களது அணி எப்படி இருக்கும் என்பதை உரத்து பேசுவோம். ஒரு அணியாக அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது.

முடிவுகளைக் கொண்ட அமைப்பாக இதை உருவாக்க மாட்டேன். அதற்கு மாறாக இது நடைமுறை ரீதியிலான ஒரு அமைப்பாக அணியை மாற்றுவேன். அதனால், நேர்மறையான விஷயங்களில் மட்டுமே கவனத்தை செலுத்துவோம்.

சரியான நேரம் வரும்போது இன்னும் சில விஷயங்களை சிறப்பாக செய்து முடிப்போம்.

சொந்த மண்ணில் லக்னௌ அணி தோல்வியுற்றது ரசிகர்களுக்கு ஆர்வத்தை இழக்கச் செய்திருக்கலாம். ஆனால், நாங்கள் எங்களுக்கென்று ஒரு தரத்தை நிர்ணயிப்போம்.

அணியாக ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நல்ல நாள்கள், மோசமான நாள்கள் என அனைத்தையும் ஒன்றாக கடக்கவிருக்கிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com