
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் வீரர் தீபக் சஹார் மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் சிஎஸ்கே வீரரான 32 வயதாகும் தீபக் சஹார் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
86 ஐபிஎல் போட்டிகளில் 81 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ப்ந்தினை ஸ்விங் செய்வதால் பவர்பிளேவில் அதிகமான விக்கெட்டுகளை எடுப்பதில் சிறந்தவராக இருக்கிறார்.
இன்று (ஏப்.13) இரவு மும்பை இந்தியன்ஸ் அணி தில்லியுடன் மோதவிருக்கிறது. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி ஆர்சிபியுடன் தோல்வியுற்றது.
தீபக் சஹார் பேசியதாவது:
மனநிலை முக்கியமானது
எனக்கு கடந்த 3 ஆண்டுகளாக காயம் ஏற்பட்டன. காயம் எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இது நடந்திருக்கிறது. என்னுடைய மனநிலை வித்தியாசமானது.
நான் காயத்திலிருக்கும்போது வேறு ஒரு வீரர் விளையாடுவார். அதனால் நான் கம்பேக் கொடுக்க முடியாது என நம்பமாட்டேன்.
உங்களால் மீண்டும் திரும்ப வரமுடியாது என நினைத்தால் அதுதான் உங்களது மிகப்பெரிய பிரச்னை. நான் என்னைச் சந்தேகப்பட்டதே கிடையாது.
இந்திய அணியில் இடம் பிடிப்பேன்
இந்திய அணியில் எனது திறமை நன்றாக வெளிப்பட்டுள்ளது. நான் விளையாடும்போது எப்போதும் நல்ல நிலைமையிலேயே இருக்கிறேன்.
தொடர்ச்சியாக விளையாடும்போது நன்றாக விளையாடினால் மீண்டும் இந்திய அணியில் தேர்வாகுவேன்.
மனநிலைதான் மிகவும் முக்கியம். எனது திறமை மீது நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் நான் இந்திய அணியில் கம்பேக் தருவேன் என்றார்.
தீபக் சஹார் இந்தியாவுக்காக 25 போட்டிகளில் 31 விக்கெட்டுகள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.