
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக அதிவேகமாக சதம் விளாசிய அபிஷேக் சர்மா அவரது சதத்தை ஹைதராபாத் ரசிகர்களுக்கு சமர்ப்பித்தார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நேற்று (ஏப்ரல் 12) நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மாவின் அபார ஆட்டத்தினால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 40 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 55 பந்துகளில் 141 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஹைதராபாத் ரசிகர்களுக்கு சமர்ப்பணம்
அதிரடியாக சதம் விளாசிய அபிஷேக் சர்மா மிகவும் மகிழ்ச்சியாக அதனைக் கொண்டாடினார். சதம் விளாசிய பிறகு, தனது பாக்கெட்டிலிருந்து அபிஷேக் சர்மா ஒரு காகிதத்தை எடுத்துக் காட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
அந்த காகிதத்தில் இந்த சதத்தினை ஹைதராபாத் அணியின் ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் (திஸ் ஒன் இஸ் ஃபார் ஆரஞ்ச் ஆர்மி) என எழுதப்பட்டிருந்தது.
தொடர்ச்சியான தோல்விகளிலிருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்திலிருந்து 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.