
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை நேற்றிரவு (மே.7) வீழ்த்தியது.
கடந்த 2023ஆம் ஆண்டு தோனிக்கு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அப்போதிலிருந்து தனது உடல்தகுதியில் பின் தங்கி வந்துள்ளார்.
இந்த சீசனோடு தோனி ஓய்வுபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் காயம் காரணமாக வெளியேற கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
தொடா்ந்து 4 தோல்விகளை சந்தித்த சென்னை, கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றியின் மூலம் மீண்டிருக்கிறது.
போட்டி முடிந்தபிறகு ஓய்வு குறித்து தோனி பேசியதாவது:
கொல்கத்தாவில் மட்டுமல்ல எங்குச் சென்றாலும் எனக்கு அன்பும் நேசமும் மக்களிடமிருந்து கிடைக்கிறது. எனக்கு 43 வயதாகிறது. நீண்ட காலமாக விளையாடி வருகிறேன்.
ரசிகர்களுக்கு எனது கடைசிபோட்டி எதுவென்று தெரியாது. அதனால், அவர்கள் நான் விளையாடுவதைப் பார்க்க வருகிறார்கள்.
என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்ட நிலையில் இருக்கிறேன். அந்த உண்மையில் இருந்து தப்பப்போவதில்லை.
இந்த ஐபிஎல் முடிந்ததும் அடுத்து 6-8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இந்த அழுத்தங்களை எல்லாம் எனது உடல் தாங்கினால் அடுத்த ஆண்டு விளையாடுவேன். தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றார்.
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் தோனி சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.