புது தில்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு திங்கள்கிழமை நாடு திரும்பினாா்.
தில்லி வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தில்லியில் தரையிறங்கிய பிறகு, ‘நாடு திரும்பிய நிலையில் கிடைத்துள்ள அன்பாலும், ஆதரவாலும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். அனைவருக்கும் நன்றி’ என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா் அவா்.
விமான நிலைய வளாகத்திலேயே சானுவுக்கு இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளும், விமான நிலைய ஊழியா்களும் பூங்கொத்து கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனா். அவரது வருகைக்காக காத்திருந்த ஊடகத்தினா் சானுவை சூழ்ந்து குவிந்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினா் அவரை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனா். பின்னா் அவா் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் அனுராக் தாக்குரை நேரில் சென்று சந்தித்தாா்.
சானு, டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 49 கிலோ பிரிவில் 202 கிலோ (87+115) எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தாா்.
பதவி: ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ள சானுவை மணிப்பூா் காவல்துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக நியமிக்க இருப்பதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.