ஒலிம்பிக்ஸ் வட்டு எறிதல்: இந்தியாவின் கெளர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி (விடியோ)

இறுதிச்சுற்றில் பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
ஒலிம்பிக்ஸ் வட்டு எறிதல்: இந்தியாவின் கெளர் இறுதிச்சுற்றுக்குத் தகுதி (விடியோ)
Published on
Updated on
1 min read

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மகளிர் வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கெளர், இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற போட்டியில் தனது கடைசி முயற்சியில் 64 மீ. தூரம் எறிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். தகுதிச்சுற்றில் கலந்துகொண்ட வீராங்கனைகளில் கெளருக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. நடப்பு ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்களை விடவும் அதிகத் தூரம் வீசி அசத்தியுள்ளார். தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் வலரி 66.42 மீ. தூரம் வீசி முதலிடம் பெற்றார். தகுதிச்சுற்றுகளில் 64 மீ. அல்லது முதல் 12 இடங்களைப் பிடிக்கும் வீராங்கனைகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார்கள். 

60.57 மீ. தூரம் வீசி 16-வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் மூத்த வீராங்கனை சீமா புனியா, இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இது அவருடைய 4-வது மற்றும் கடைசி ஒலிம்பிக்ஸ்.  இதுவரை ஒருமுறை கூட இறுதிச்சுற்றுக்கு அவர் தகுதி பெற்றதில்லை. 

ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்ற 2-வது இந்திய வீராங்கனை, கெளர். இதற்கு முன்பு 2012-ல் கிருஷ்ணா பூனியா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். 

சமீபத்தில் 66.59 மீ. தூரம் எறிந்து சாதனை படைத்தார் கெளர். இதனால் இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று ஆகஸ்ட் 2, இந்திய நேரம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com