
ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்கவிருந்த வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி, ஒலிம்பிக் அமைப்பு அவரை தகுதி நீக்கம் செய்திருப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மோடி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“வினேஷ், நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை. ஒவ்வொரு இந்தியருக்கும் நீங்கள் உத்வேகம். இன்றைய பின்னடைவு எனக்கு வேதனை அளிக்கிறது.
நான் அனுபவிக்கும் விரக்தியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அதேசமயம் சவால்களை நேருக்கு நேர் சந்திப்பது உங்களின் இயல்பு என்பது எனக்கு தெரியும். வலுவாக மீண்டு வாருங்கள். உங்களுக்காக அனைவரும் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி.உஷாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி முதல்கட்ட தகவல்களை கேட்டறிந்ததாகவும், வினேஷ் போகத் தகுதிநீக்க விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய உடல் பரிசோதனையின்போது, வினேஷ் போகத், 50 கிலோ எடையை விட கூடுதலாக 100 கிராம் இருந்ததால், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. போட்டி விதிமுறைகளை மீறி கூடுதல் எடையில் இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வினேஷ் போகத் விளையாடாததால், அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து மக்களவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.