இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-ஆவது அரையிறுதியின் முதல் சுற்றில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.
தில்லியில் புதன்கிழமை நடைபெறும் 2-ஆவது சுற்று அரையிறுதி ஆட்டத்தில் டிரா செய்தாலே கேரள அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிடலாம்.
கொச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தைக் காண 50 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர். உள்ளூர் ரசிகர்களின் உற்சாக ஆதரவுக்கு மத்தியில் அசத்தலாக ஆடியது கேரள அணி. அதேநேரத்தில் டெல்லி அணியும் அபாரமாக ஆட, ஆரம்பத்திலேயே அனல் பறந்தது.
இதனால் 19-ஆவது நிமிடத்தில் இரு அணி வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டெல்லி வீரர் மார்செலோ, கேரள அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தார். அவரை முன்னேறவிடாமல் தொடர்ந்து போராடிய கேரள இடது பின்கள வீரர் ஜோசு மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார். இதையடுத்து 31-ஆவது நிமிடத்தில் அவரை வெளியேற்றிவிட்டு டிடியரை களமிறக்கியது கேரளம்.
45-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை கேரளம் கோட்டைவிட, முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது. பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் கெங்பர்ட் கொடுத்த பாஸில் பெல்ஃபோர்ட் கோலடிக்க, கேரளம் 1-0 என முன்னிலை பெற்றது. அப்போது கேரள ரசிகர்களின் மகிழ்ச்சி பெருக்கால் மைதானம் அதிர்ந்தது.
இதன்பிறகு ஸ்கோரை சமன் செய்ய டெல்லி அணி கடுமையாகப் போராடியபோதும், கடைசி வரை கோல் கிடைக்கவில்லை. இதனால் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்

தனியாா்மயமாக்கல் திட்டத்துக்கு அரசு புத்துயிா் அளிக்க வேண்டும்: நீதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவா்அரவிந்த் பனகாரியா

முனம்பம் நில விவகாரம்: கேரள வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்







