

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவின் பெயரை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது அகில இந்திய டென்னிஸ் சங்கம்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-கனடாவின் கேப்ரில்லா டப்ரோவ்ஸ்கி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தார் போபண்ணா. பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-ஆவது இடத்தில் இருந்த போபண்ணா-கேப்ரில்லா ஜோடி 2-6, 6-2, 12-10 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் அன்ன லீனா-கொலம்பியாவின் ராபர்ட் ஃபாரா ஜோடியைத் தோற்கடித்தது. இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்ற 4-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் போபண்ணா. லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்ஸா ஆகியோர் மற்ற மூவர்.
விளையாட்டுத்துறையில் நாட்டுக்கு நற்பெயரை ஈட்டித்தரும் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற ரோஹன் போபண்ணாவின் பெயரை அர்ஜுனா விருதுக்குப் பரிந்துரைத்துள்ளது அகில இந்திய டென்னிஸ் சங்கம்.
இதற்கு முன்பு பலமுறை போபண்ணாவின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளோம். ஆனால் அவருக்கு விருது வழங்கப்படவில்லை. ஆனால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றபிறகு அவருக்குக் கட்டாயம் விருது வழங்கப்படவேண்டும். ருஷ்மி சக்கரவர்த்தியின் பெயரையும் பரிந்துரை செய்துள்ளோம் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.