இறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றிவிட்டனர்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் தரும் வகையில் விளையாடியதாக மூத்த பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாடியுள்ளார்.
இறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றிவிட்டனர்
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் தரும் வகையில் விளையாடியதாக மூத்த பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சாடியுள்ளார்.
அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 338 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இந்தியா 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு சுருண்டது.
இந்நிலையில், அந்த ஆட்டம் குறித்து சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியதாவது:
இறுதி ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஏமாற்றம் தரும் வகையில் பந்துவீசினர். மிடில் ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்ததும், சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த இயலாமல் போனதுமே பாகிஸ்தான் அணி அத்தகைய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியாக இருந்தது.
தொடக்கத்தில் இருந்தே நாம் சரியாக ஆடவில்லை. சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தாமல் போனதோடு அல்லாமல், அதிக ரன்களும் கொடுத்தனர். அதேபோல், ஃபீல்டிங்கும் முந்தைய ஆட்டங்களில் இருந்தது போல, இறுதி ஆட்டத்தில் அமைக்கப்படவில்லை.
இறுதி ஆட்டத்தின் முக்கியமான தருணம் தொடக்கத்திலேயே நிகழ்ந்துவிட்டது. நோ பால் காரணமாக ஃபஹார் ஸமானின் விக்கெட்டை தவறவிட்டதே அந்தத் தருணம். அதைத் தொடர்ந்து ஆடிய அவர், ஆட்டத்தை இந்தியாவிடம் இருந்து பறித்து பாகிஸ்தான் வசமாக்கிவிட்டார். சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் சிங்கிள்ஸ் எடுப்பதற்கு பதிலாக, அடித்து ஆடத் தொடங்கினார்.
338 ரன்கள் என்பது எட்டுவதற்கு கடினமான இலக்காக இருந்தாலும், நமது அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரியான தொடக்கத்தை ஏற்படுத்தித் தருவார்கள் என்று நம்பினோம். ஆனால், ரோஹித், தவன், கோலி என அடுத்தடுத்த விக்கெட் வீழ்ச்சி ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பாகவே, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவதற்கான அனைத்து நம்பிக்கையும் இந்தியாவுக்கு இருந்தது. இலங்கையைத் தவிர, நமக்கு எதிராக ஆடிய அனைத்து அணிகளையும் குறிப்பிடத்தக்க வகையில் தோற்கடித்திருந்தோம். அப்படி ஒரு சிறந்த அணி, அதிலும் பேட்டிங்கில் சிறந்து விளக்கும் அணி, சாம்பியன்ஸ் டிராபியில் ஒட்டுமொத்தமாக விளையாடியதை கணக்கில் கொண்டால் திருப்தி அளிப்பதாக இல்லை என்று ஹர்பஜன் சிங் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com