

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 'பார்டர்-கவாஸ்கர் டிராபி'க்கான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வாகை சூடியது. இது, கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியின்றி இந்தியா பதிவு செய்துள்ள 7-ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். முன்னதாக, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் இந்திய அணிக்கு, 'ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது' செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அத்துடன், அதற்கான பரிசுத் தொகையாக ரூ.6.50 கோடிக்கான காசோலையும் வழங்கப்பட்டது.
தர்மசாலா டெஸ்ட் நிறைவு நிகழ்ச்சியின்போது, அந்த விருது மற்றும் காசோலையை இந்திய அணி கேப்டன் விராட் கோலி பெற்றுக்கொண்டார்.
அணியின் புதிய சவால் குறித்து அவர் பேசியதாவது:
அணிகளுக்கான டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பது மகிழ்ச்சி. டெஸ்ட் போட்டியானது, ஒரு அணியின் குணநலன்களை சோதிக்கும் களமாக உள்ளது. அதில் நாங்கள் சிறந்தவர்கள் என தற்போது நிரூபித்துள்ளோம். தற்போது பெற்றுள்ள வெற்றிக்காக மிகுந்த சந்தோஷம் கொள்ள முடியாது. தற்போது உலகின் நம்பர் 1 அணியாக இருக்கிறோம். இப்போது தான் எங்களுக்கான சவால் தொடங்கியுள்ளது.
வெளிநாடுகளில் தொடரை வெல்லும்போதுதான் நான் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவேன். அது ஒரு கெளரவமான தருணம் என்று கோலி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.