

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இந்த முறையும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என முன்னாள் இலங்கை கேப்டன் குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி வரும் வியாழக்கிழமை இங்கிலாந்தில் தொடங்கவுள்ள நிலையில் சங்ககாரா மேலும் கூறியதாவது: சாம்பியன்ஸ் டிராபியில் இந்த முறை 4 ஆசிய அணிகள் பங்கேற்கின்றன. ஆசியாவைப் பொறுத்தவரையில் இந்திய அணிதான் முன்னணி அணியாக திகழ்கிறது. கடந்த முறை (2013-இல்) சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி வாகை சூடியது. இந்த முறையும் கோப்பையை வெல்லும் தகுதி அந்த அணிக்கு உள்ளது. இந்திய அணி வலுவான அணியாகவும், சமபலம் கொண்ட அணியாகவும் உள்ளது. அந்த அணியின் வேகப்பந்துவீச்சு மிக வலுவாக உள்ளது. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் ஒரு நாள் போட்டியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஐபிஎல் போட்டியில் திணறிய விராட் கோலி, சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக ஆடி சரிவிலிருந்து மீள்வது உறுதி.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம். அதேநேரத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். முந்தைய காலங்களில் ஒன்றிரண்டு அணிகளே ஒரு நாள் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தின. அதனால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணிக்க முடிந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஏராளமான அணிகள் வலுவான அணிகளாக உருவெடுத்துள்ளன. தற்போதைய நிலையில் 4 அல்லது 5 அணிகள் சமபலம் கொண்டவையாக உள்ளன. அவையனைத்துமே பெரிய போட்டிகளில் கோப்பையை வெல்வதில் தீவிரமாக உள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.