ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடித் தோல்வியடைந்தார்.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அவர், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில், அவர் உலகின் முதல் நிலை வீராங்கனையான தைவானின் டாய் ஸூ யிங்கை எதிர்கொண்டார்.
முதல் செட் தொடங்கியதில் இருந்து இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் முதல் செட்டை 18-21 என்ற கணக்கில் டாய் ஸூ கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் சிந்து சரியான பதிலடி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு ஏற்ற படி முதல்பாதியில் 10-8 என்ற கணக்கில் பிவி சிந்து முன்னிலை பெற்றார். பின்னர் ஆட்டம் டாய் ஸூ வசம் மாறியது.
இறுதியில் 18-21 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் டாய் ஸூ கைப்பற்றி சாம்பியன் பட்டத்தினை தட்டிச் சென்றார்.
இதற்கு முன்னர் ஹாங்காங் ஓபனில் கடந்த 1982- ஆம் ஆண்டு இந்தியாவின் பிரகாஷ் படுகோனும், அதன்பிறகு 2010- ல் சாய்னா நெவாலும் பட்டம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.