பாகிஸ்தான் செல்ல மறுத்தால் அணியில் இருந்து நீக்கம்: இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

பாகிஸ்தான் செல்ல மறுத்தால் அணியில் இருந்து நீக்கம்: இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை

பாகிஸ்தான் செல்ல மறுக்கும் வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் எச்சரித்துள்ளது.
Published on

இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் தொடர்களை நடத்துவது தொடர்பாக இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்தன. இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுப்பயணம் செய்த பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டிகளிலும் வென்று 3-0 என தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெறவுள்ளது.  அதில், 2 போட்டிகளை அபுதாபியிலும், 1 போட்டியை பாகிஸ்தானிலும் நடத்த திட்டமிடப்பட்டது.


இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் மட்டும் பங்கேற்பது தொடர்பாக இலங்கை வீரர்கள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் வீரர்களை சம்மதிக்க வைப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்ததை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் விளையாடாத வீரர்கள் அடுத்து அபுதாபியில் நடக்கும் 2 போட்டிகளுக்கான அணியில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற இலங்கை அணி மீதுதான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் 6 பாதுகாவலர்கள் உயிரிழந்தனர். மேலும் சில இலங்கை வீரர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தனர்.

இதன்காரணமாக இதர கிரிக்கெட் அணிகளும் பாகிஸ்தான் செல்வதை தவிர்த்தன. சமீபத்தில்தான் உலக லெவன் அணியைக் கொண்ட ஒரு கண்காட்சிப் போட்டித் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெற்றிகரமாக நடத்தியது. இதன்மூலம் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com