/

மிகப்பெரிய பேரிழப்பு: கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இரங்கல்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:27 pm

DIN

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார்.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி (94) செவ்வாய்க்கிழமை மாலை 6.10 மணியளவில் காலமானார்.

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் பதப்படுத்தப்பட்டு, இரவு 9 மணியளவில் ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. 

அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இறுதி மரியாதை செலுத்தினர். நள்ளிரவு ஒன்றரை மணி வரை கோபாலபுரம் இல்லத்திலும் பின்னர் சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையும் கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டது. அங்கிருந்து அதிகாலை 4 மணிக்கு அண்ணாசாலை ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய், திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:

ஒரு மாபெரும் தலைவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மக்களின் முன்னேற்றத்துக்காக போராடியுள்ளார். இது மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.