அவதூறு வழக்கு: கெயிலுக்கு ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க ஆஸி. உச்ச நீதிமன்றம் உத்தரவு
தன்னைப் பற்றி அவதூறாக எழுதிய ஆஸ்திரேலிய ஊடகம் மீது வழக்கு தொடர்ந்த பிரபல கிரிக்கெட் கிறிஸ் கெயிலுக்கு ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்க ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 உலகக் கோப்பை போட்டியின்போது மேற்கிந்திய அணியின் பெண் மருத்துவ நிபுணர் ஒருவரிடம் ஆபாச செயலை பிரபல வீரர் கிறிஸ் கெயில் வெளிப்படுத்தியதாக ஃபேர்ஃபேக்ஸ் மீடியா நிறுவன ஊடகங்களான தி சிட்னி மார்னிங் ஹெரால்ட், தி ஏஜ், தி கேன்பெரா டைம்ஸ் ஆகியவற்றில் செய்திகள் வெளியாகின. தன்னைக் கீழே தள்ள ஆஸி. ஊடகங்கள் முயல்வதாக கெயில் இக்குற்றச்சாட்டை மறுத்தார். அப்போது சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் ஓய்வறையில் தான் இருந்ததாகவும் அதுபோல அநாகரிகமான செயலை கிறிஸ் கெயில் செய்யவில்லை என்றும் மேற்கிந்திய வீரர் டுவைன் ஸ்மித் பேட்டியளித்தார்.
இதையடுத்து ஃபேர்ஃபேக்ஸ் மீடியா மீது அவதூறு வழக்கு தொடுத்தார் கெயில். நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றம் கெயிலுக்கு ஆதரவான தீர்ப்பை கடந்த வருட அக்டோபர் மாதம் தீர்ப்பு அளித்தது. இந்நிலையில் அவதூறு வழக்கில் கெயிலுக்கான இழப்பீடாக ரூ. 1.50 கோடி ($220,770) வழங்குமாறு ஃபேர்ஃபேக்ஸ் மீடியா-வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.