
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளது என மே.இ.தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆண்டிகுவா அமெரிக்க பல்கலைக்கழக மருத்துவ பள்ளி சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது சிறந்ததாகத் திகழ்கிறது. பெர்த்தில் இரண்டாவது டெஸ்டை இழந்தாலும், மேலும் 2 டெஸ்ட் ஆட்டங்கள் உள்ளன. சிறப்பான உத்திகளை வகுத்து ஆடினால் இந்தியா, முதன்முறையாக ஆஸி.யில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இன்னும் வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன்.
முந்தைய இந்திய அணிகளைக் காட்டிலும் தற்போதுள்ள அணி வலுவாக உள்ளது. தற்போது ஆஸியில் வெல்லாவிட்டால் இனிமேல் எப்போதுமே வெல்ல முடியாது.
ஆக்ரோஷமான போக்கு தவறில்லை: விராட் கோலி நான் மிகவும் விரும்பும் வீரர்களில் ஒருவர். அவர் தனக்காகவும், அணிக்காவும் ஆக்ரோஷமான போக்கை கடைபிடிப்பது தவறில்லை. மைதானத்தில் போட்டி மனப்பான்மையோடு மோதுவது நல்லது தான். ஆனால் தனிப்பட்ட முறையில் வார்த்தைகளை பிரயோகிப்பது, இனரீதியில் சீண்டுவதை தவிர்க்க வேண்டும்.
எதிராளிகள் தருவதை கோலி மீண்டும் ஆட்டத்தின் மூலம் திருப்பித் தருகிறார்.
மே.இ.தீவுகள் நிலை சீராகும்: மே.இ.தீவுகள் அணியின் பரிதாபமான நிலை குறித்து அவர் கூறியதாவது:
ஒரு காலத்தில் கிரிக்கெட் என்றால் மே.இ.தீவுகள் தான் என இருந்தது. தற்போது பல்வேறு பிரச்னைகளால் நிலைகுலைந்துள்ளது. நிதித் தட்டுப்பாடு உள்பட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனினும் புதிய இளம் வீரர்கள் அறிமுகமாகி வருகின்றனர். விரைவில் நிலைமை சீராகி பழைய சிறப்பை மே.இ.தீவுகள் பெறும். அதே நேரத்தில் கிரிக்கெட் வாரிய பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. வீரர்களுக்கு ஆலோசனை மட்டுமே கூறுவேன்.
லீக் போட்டிகளால் பாதிப்பு கூடாது: டி 20, டி 10 போன்ற லீக் போட்டிகளால் வழக்கமான டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. வீரர்களுக்கு இதன் மூலம் அதிக வருவாய் கிடைத்தாலும், நாட்டுக்காக ஆடுவதற்கே முன்னுரிமை தர வேண்டும். சர்வதேச போட்டிகளில் நாட்டுக்காக ஆடும் போது லீக் போட்டிகளுக்கு முன்னுரிமை தரக்கூடாது.
லீக் போட்டிகளால் அதிக வருவாய் கிடைப்பதற்கு முக்கியத்துவம் தராமல் டெஸ்ட், ஒரு நாள் ஆட்டங்களுக்கும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் லீக் போட்டிகளின் கட்டமைப்பு இருக்க வேண்டும்.
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் உள்ளிட்டோர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற செயல்கள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சூதாட்டம், மேட்ச் பிக்ஸிங் போன்றவற்றில் ஈடுபடுவோர் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடும் தண்டனை தர வேண்டும். அப்போது தான் கிரிக்கெட் உயிர்ப்புடன் இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







