இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-ஆவது ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹீர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாவது:
4-ஆவது ஒருநாள் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க அணியில் இம்ரான் தாஹீர் இடம்பெறவில்லை. இருப்பினும் அவர் 12-ஆவது வீரராக செயல்பட்டார். அப்போது ஒவ்வொரு முறையும் அவர் இதர வீரர்களுக்காக குடிநீர் கொண்டு வருகியைில் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
வீரர்களின் ஓய்வு அறையின் அருகில் உள்ள பார்வையாளர்கள் மையத்தில் இருந்த நபர் ஒருவர் இச்செயலை தொடர்ந்து செய்துள்ளார். இதுகுறித்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் தாஹீர் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த நபர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
மேலும் அந்த நபருடன் இம்ரான் தாஹீர் கைகலப்பில் ஈடுபட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. ஆனால் அதுபோன்ற எந்த சம்பவமும் அங்கு நடைபெறவில்லை. இதுதொடர்பாக அந்த காவலர்களுடன் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.
முதலாவதாக ஐசிசி விதிகளின்படி ஆடுகளத்தில் வீரர்களுக்கு யாராவது தேவையற்ற இடர்பாடுகளை ஏற்படுத்தினால், அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்படுவர். கூடிய விரைவில் அந்த நபர் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்ய பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றிருந்தது.
முன்னதாக 2014-ம் ஆண்டு இதே மைதானத்தில் நடைபெற்ற ஒரு போட்டியின் போதும் இம்ரான் தாஹீர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதுபோல கடந்த 2015-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது மனுகா ஓவல் மைதானத்திலும் ஒரு பகுதியிலிருந்த ரசிகர்கள் கூட்டம் தாஹீரை நோக்கி இனவெறி வாசகங்களை கட்டவிழ்த்துவிட்டது குறிப்பிடத்தக்கது.