
1996 முதல் 2001 வரை இந்திய அணிக்காக 15 டெஸ்டுகள், 69 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார் சுனில் ஜோஷி. சமீபத்தில் வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராகப் பணியாற்றிய இவர், தற்போது இந்திய அணிக்கான பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட சக பயிற்சியாளர்களைத் தேர்வு செய்ய ஜாம்பவான் கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனைக் குழுவுக்கு (சிஏசி) பிசிசிஐ சிஓஏ அனுமதி அளித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிக்குப் பின் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டது. தற்போதுள்ள தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, மற்றும் இதர பயிற்சியாளர்களுக்கு மே.இ.தீவுகள் தொடர் வரை 45 நாள்கள் பணிநீட்டிப்பு தரப்பட்டுள்ளது. கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட சிஏசி புதிய பயிற்சியாளர் நியமனத்தை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.
சுனில் ஜோஷி ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஆமாம். நான் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளேன். வங்கதேச அணியுடன் இரண்டரை வருடங்கள் பணியாற்றிய பிறகு புதிய சவாலுக்குத் தயாராக உள்ளேன். சர்வதேச அணிகள் வேகப்பந்துவீச்சுக்கும் சுழற்பந்துவீச்சுக்கும் எனத் தனித்தனியாகப் பயிற்சியாளர்களைக் கொண்டுள்ளன. இந்திய அணிக்கும் இதுபோன்ற சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் அவசியம். அது நானாகவோ அல்லது வேறு யாராகவோ இருக்கலாம். காலத்தின் கட்டாயம் இது. தங்களுக்குச் சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் அவசியமில்லை என எந்த அணி நினைத்தாலும் அதன் மனநிலை தவறானது என்று ஒரு பேட்டியில் தான் விண்ணப்பித்தது குறித்துத் தெரிவித்துள்ளார் சுனில் ஜோஷி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.