வேகம் தான் எங்கள் பலம் என மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஜேஸன் ஹோல்டர் குறிப்பிட்டார்.
இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்டில் 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதை தொடர்ந்து இதிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது.
ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வயிட்-வாஷ் ஆன நிலையில், 2-ஆவது டெஸ்டில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்து ஆறுதல் அடைய மே.இ.தீவுகள் அணி முயற்சிக்கிறது. இதுதொடர்பாக அந்த அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் கூறுகையில்,
வேகப்பந்துவீச்சு தான் மேற்கிந்திய தீவுகள் அணியின் பலம். ரோச், கேப்ரியல் என எங்களின் வேகப்பந்துவீச்சு சிறப்பாகவே அமைந்துள்ளது. இதில் நானும் எனது பங்களிப்பை அளித்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளாகவே வேகப்பந்துவீச்சை சார்ந்து தான் நாங்கள் களமிறங்குகிறோம். எனவே இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயற்சி செய்வோம்.
முதல் டெஸ்டில் எங்கள் ஆட்டம் திருப்திகரமாக இல்லை. 2-ஆவது டெஸ்டில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்ய சிறந்த வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வோம். எனவே இதில் சிறப்பான ஆட்டத்தை அனைவரும் வெளிப்படுத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.