நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தரவரிசையில் முன்னேற்றம் கண்டபின் தான் 2020 ஒலிம்பிக் குறித்து சிந்தனை: பிரஜ்னேஷ் குணேஸ்வரன்

தரவரிசையில் முன்னேற்றம் கண்டபின் தான் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் கூறியுள்ளார்.

News image
Updated On :11 பிப்ரவரி 2019, 7:35 pm

சுஜித்குமார்

தரவரிசையில் முன்னேற்றம் கண்டபின் தான் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடர்பாக கவனம் செலுத்த முடியும் என இந்தியாவின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் கூறியுள்ளார்.
29 வயதான பிரஜ்னேஷ், சென்னையில் பிறந்தவர். தற்போது இந்தியாவின் நம்பர் ஒன் வீரராக உள்ள அவர் 2 ஏடிபி சேலஞ்சர் பட்டங்கள், 8 ஐடிஎப் ஒற்றையர் மற்றும்  1 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார். கடந்த 2018 ஆண்டு 4 ஏடிபி சேலஞ்சர் போட்டி இறுதிக்கு தகுதி பெற்ற அவர் 2-இல் பட்டம் வென்றார்.
மேலும் கடந்த 2018 ஜாகர்த்தாவில் நடைபெற்ற ஆசியப் போட்டியிலும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றார் அவர். தற்போது ஏடிபி தரவரிசையில் 102-ஆவது இடத்தில் உள்ளார் பிரஜ்னேஷ்.
இந்நிலையில் சென்னை ஏடிபி ஓபன் சேலஞ்சர் போட்டி அரையிறுதியில் அவர் ஆஸ்திரேலியாவின் ஹாரிஸ் உடன் போராடி தோல்வியுற்றார். இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
தற்போது சென்னை ஓபன் சேலஞ்சர் போட்டியில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடி வருகிறோம். சசிகுமார் முகுந்த்துக்கும் இது சிறந்த அனுபவமாக திகழ்ந்தது.  அரையிறுதியில் ஆஸி. வீரர் ஹாரிஸ் அடித்து ஆட நானே வாய்ப்புகளை ஏற்படுத்தினேன். அதில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் முதல் செட்டை இழந்தேன். 
சென்னை ஓபன் முடிவால் வேதனை
இது கடினமான ஆட்டமாக அமைந்து விட்டது. நாள்தோறும் ஆட்டங்கள், கடும் வெயில் போன்றவற்றால் சோர்வாக இருந்தது. எதிராளிக்கும் இதே நிலை தான். சென்னை ஓபன் முடிவு மகிழ்ச்சி தருவதாக இல்லை. ஹாரிஸ் என்னை விட சிறப்பாக ஆடினார். மூன்றாவது செட்டில் அவர் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி விட்டார்.
கொல்கத்தா டேவிஸ் கோப்பை அனுபவம் என்பது உயர்ந்ததாகும். இந்த ஆட்டத்துக்கும் டேவிஸ் கோப்பைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு பின்னர் நடைபெறவுள்ள சேலஞ்சர் ஆட்டங்களில் தீவிர கவனம் செலுத்துவேன். எப்படி ஆடுகிறேன் என்பதையும் கவனம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் அதிகளவு ஆட்டங்கள் உள்ளன. அவற்றில் பட்டங்கள் வெல்ல முயல்வேன்.
தரவரிசையில் முன்னேற்றம் தேவை
தரவரிசையில்  முதல் 20 இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கம். பேக் ஹேண்ட் முறையை அதிகம் பின்பற்றுவேன். தற்போது 95-ஆவது இடத்தில் உள்ளேன். ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். சில புதிய உத்திகளை பின்பற்ற வேண்டும். போட்டிகளில் எந்தெந்த வகையில் வலுக்குறைவாக உள்ளேன் என்பதை அறிந்து அதை பலப்படுத்துவேன்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி
தரவரிசையில் முன்னேற்றம் கண்டாலே ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் கவனம் செலுத்த முடியும். எனவே தரவரிசையில் முன்னேற்றம் அடைய முனைப்பாக உள்ளேன். இந்த ஆண்டு எனது குறிக்கோள்கள் வேறாக உள்ளது.
உடல் தகுதி முக்கியம்
இந்திய வீரர்கள் பொதுவாக காயமுற்று வருகின்றனர். ஒற்றையர் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துவேன். உடல்தகுதி என்பது ஒரு நடைமுறையாகும். களிமண் தரையில் ஆடுவோரும் தகுதியுடன் தான் உள்ளனர். தென் அமெரிக்க வீரர்கள் உடல்தகுதியுடன் காணப்படுகின்றனர். ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைக்கு ஏற்ப நாம் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.  இந்திய வீரர்களும் உடல்தகுதியுடன் விளங்கலாம். ஆனால் நமது கலாசாரம், உணவுமுறை, பயிற்சி முறைகளும் வெவ்வேறாக உள்ளது. சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உடல்தகுதி முக்கியம்.
இந்திய வீரர்களுக்கு போதிய அனுபவம் கிடைக்க அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டும். எனினும் அதிக தொகை தேவைப்படுகிறது. உள்ளூர் ஆதரவும், நிதியுதவியும் தேவைப்படுகிறது. இதுதொடர்பாக ஏஐடிஏ தான் முடிவெடுக்க வேண்டும்.
அடுத்து பாங்காக்கில் இரண்டு சேலஞ்சர் ஆட்டங்கள் உள்ளன என்றார் பிரஜ்னேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.