ஸ்ரீநகரில் தன்னுடைய ராணுவக் களப் பணியை இன்று தொடங்கியுள்ளார் தோனி.
மேற்கிந்தியத் தீவுகளுடன் நடைபெற உள்ள ஒருநாள், டி20 தொடர்களில் தான் பங்கேற்கவில்லை, தான் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள ராணுவம் (டெரிட்டோரியல் ஆர்மி) பாராசூட் ரெஜிமெண்ட் உடன் 2 மாதங்கள் தங்கி பணிபுரியப் போவதாக பிசிசிஐக்கு தகவல் தெரிவித்தார் தோனி. இதனால் அணித் தேர்வில் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
ராணுவத்தில் கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி, பாராசூட் ரெஜிமண்டில் தங்கி பயிற்சி பெற அனுமதி தர வேண்டும் எனக் கோரியிருந்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்த ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் இதற்கு அனுமதி அளித்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தோனிக்குப் பயிற்சி தரப்பட்டு வருகிறது. எனினும் அவர் ராணுவத்தின் தாக்குதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை காஷ்மீரில் ராணுவக் குழுவினருடன் இணைந்து ரோந்துப் பணிக்குச் செல்கிறார் தோனி. காஷ்மீரில் சக வீரர்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் அவர் ஈடுபடுகிறார். மேலும் வீரர்களுடன் இணைந்து தங்கவுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீநகரில் தன்னுடைய ராணுவக் களப் பணியை இன்று தொடங்கினார் தோனி. ஸ்ரீநகரிலிருந்து தன்னுடைய ராணுவக் களப் பணியைத் தொடங்கியுள்ளார். தன்னுடைய 106 டெரிட்டோரியல் ஆர்மி பட்டாலியன் குழுவினருடன் இணைந்து அவர் பணியாற்றி வருகிறார். மேலும் அவருக்குப் பாதுகாப்புக்காக ஏகே 47 துப்பாக்கியும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, நான்கு ஆர்மி குட்வில் பள்ளிகளுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் உரையாடவுள்ளார் தோனி. ஐந்து உள்ளூர் கிரிக்கெட் அணிகளுடன் அறிமுகமாகி, தோனி அவர்களுடன் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.