இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக இந்த உலகக் கோப்பையில் திகழும் வீரர் தொடர்பாக முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் முழுமையாகச் செயல்பட்டது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 312 ரன்கள் வரை எடுத்திருக்கக் கூடும். ஆனால், ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் தான் 352 ரன்கள் குவிக்க முடிந்தது. இந்த வெற்றிகளின் மூலம் நடப்பு உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம் அமைந்துள்ளது.
ஆஸி.யுடனானப் போட்டியில் ஹார்திக் பாண்டியாவின் ஆட்டம் தான் திருப்புமுனையாக அமைந்தது. இந்த தொடரின் இறுதியில் பாண்டியா அதிக விக்கெட்டுகளையும் நிச்சயம் வீழ்த்துவார் என்று நம்புகிறேன்.
மேலும் ஹார்திக் போன்ற வீரர் ஆஸி. அணியில் இடம்பெறவில்லை. இங்கிலாந்து அணியில் இதுபோன்ற தரமான ஆல்-ரவுண்டர்கள் பலர் உள்ளனர். மேலும் நியூஸிலாந்து அணியுடனான ஆட்டமும் சவால் நிறைந்ததாக இருக்கும். ஆஸி. உடனான போட்டியின் மூலம் ஹார்திக் பாண்டியாவுக்கு தன்னம்பிக்கை மேம்பட்டிருக்கும்.
அதுமட்டுமல்ல இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் முக்கிய வீரராகவும் ஹார்திக் பாண்டியா திகழ்வார் என்று குறிப்பிட்டார்.