2019 உலகக் கோப்பை இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 268/7 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தொடரில் தோல்வியே காணாத அணியாகவும் இந்தியா திகழ்கிறது.
2 முறை உலகக் கோப்பை வென்றுள்ள இந்திய அணி இம்முறை ஆடிய 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆம் இடத்தில் உள்ளது. மழை காரணமாக நியூஸிலாந்து உடனான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கெல் வான் கூறியதாவது, ''இப்படி வைத்துக்கொள்வோம்... இம்முறை இந்திய அணியை வீழ்த்தும் அணிக்கே உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது'' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மைக்கெல் வானின் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.