இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்து துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ சதமடித்தார்.
2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன. பர்மிங்ஹாமில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஜோடி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தியது. ஜேஸன் ராய் 57 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து ஆடிய ஜானி பேர்ஸ்டோ சதம் விளாசினார். 10 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் விளாசி 108 ரன்களுடன் களத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் இது 8-ஆவது சதமாகும். மேலும் உலகக் கோப்பையில் பேர்ஸ்டோவின் முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.